சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.112
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=IGooaC72-8s |
4.113
திருநாவுக்கரசர்
தேவாரம்
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் பண் - திருவிருத்தம் (பொது -தனித் திருவிருத்தம் ) Audio: https://www.youtube.com/watch?v=wu5z8bfU81s |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.112  
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;
பண் - திருவிருத்தம் (திருத்தலம் பொது -தனித் திருவிருத்தம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன் விரிசடைமேல் வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி, வெள் என்பு அணிந்து, வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே. | [1] |
உடலைத் துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்பக் கடலைக் கடந்து, உய்யப் போயிடல் ஆகும்; கனகவண்ணப் படலைச் சடை, பரவைத் திரைக் கங்கை, பனிப்பிறை, வெண் சுடலைப் பொடி, கடவுட்கு அடிமைக்கண்-துணி, நெஞ்சமே! | [2] |
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம் மூ உலகுக்கு அன்னையும் அத்தனும் ஆவாய்-அழல்வணா!-நீ அலையோ? உன்னை நினைந்தே கழியும், என் ஆவி; கழிந்ததன் பின் என்னை மறக்கப்பெறாய்; எம்பிரான்! உன்னை வேண்டியதே. | [3] |
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ; நினையப் புகில் பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி; உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே! | [4] |
முழுத்தழல்மேனித் தவளப்பொடியன், கனகக்குன்றத்து எழில் பரஞ்சோதியை, எங்கள் பிரானை, இகழ்திர்கண்டீர்; தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை, தொழப்படும் தேவர்தம்மால்-தொழுவிக்கும் தன் தொண்டரையே. | [5] |
விண் அகத்தான்; மிக்க வேதத்து உளான்; விரிநீர் உடுத்த மண் அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய பண் அகத்தான்; பத்தர் சித்தத்து உளான்; பழ நாய் அடியேன் கண் அகத்தான்; மனத்தான்; சென்னியான் எம் கறைக்கண்டனே. | [6] |
பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய் இருங்கடல் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு, கங்காளராய், வரும் கடல் மீள நின்று, எம் இறை நல் வீணை வாசிக்குமே. | [7] |
வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும் தானம் துளங்கித் தலைதடுமாறில் என்? தண்கடலும் மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?-வேலை நஞ்சு உண்டு ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே. | [8] |
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான் அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில், அவன் தனை யான் பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால், இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே! | [9] |
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர்? இகலி, உன்னை நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து அன்று, நின் பெருமை- பொன்னை ஒப்பாரித்து, அழலை வளாவி, செம்மானம் செற்று, மின்னை ஒப்பாரி, மிளிரும் சடைக்கற்றை வேதியனே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.113  
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்
பண் - திருவிருத்தம் (திருத்தலம் பொது -தனித் திருவிருத்தம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள் மிசையே பவளக்குழை தழைத்தால் ஒக்கும், பல்சடை; அச் சடைமேல் பவளக்கொழுந்து அன்ன, பைம்முக நாகம்; அந் நாகத்தொடும், பவளக்கண் வாலமதி, எந்தை சூடும் பனிமலரே. | [1] |
முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி, வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்! பிணி மேய்ந்து இருந்த இருகால் குரம்பை இது நான் உடையது; இது பிரிந்தால், தருவாய், எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே! | [2] |
மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பை காவாய்! என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர் நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை; அப்பால் தீ ஆய் எரிந்து பொடி ஆய்க் கழிந்த, திரிபுரமே. | [3] |
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள் முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும் நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே? | [4] |
அந்தி வட்டத்து இளங்கண்ணியன், ஆறு அமர் செஞ்சடையான், புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும்,- பொய் என்பனோ- சந்தி வட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே? | [5] |
உன் மத்தகமலர் சூடி, உலகம் தொழச் சுடலைப் பல்மத்தகம் கொண்டு, பல் கடைதோறும் பலி திரிவான்; என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் தன் மத்தகத்து ஒர் இளம்பிறை சூடிய சங்கரனே. | [6] |
அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள்; ஐயம் உணல்; வரைப்பாவையைக் கொண்டது எக் குடிவாழ்க்கைக்கு? வான் இரைக்கும் இரைப்பா! படுதலை ஏந்து கையா! மறை தேடும் எந்தாய்!ப்பார் உரைப்பனவே செய்தியால்-எங்கள் உத்தமனே! | [7] |
துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு இறப்பன்; இறந்தால், இரு விசும்பு ஏறுவன்; ஏறி வந்து பிறப்பன்; பிறந்தால், பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர் மறப்பன் கொலோ? என்று, என் உள்ளம் கிடந்து மறுகிடுமே. | [8] |
வேரி வளாய விரைமலர்க்கொன்றை புனைந்து, அனகன், சேரி வளாய என் சிந்தை புகுந்தான்; திருமுடிமேல் வாரி வளாய வருபுனல் கங்கைசடை மறிவு ஆய், ஏரி வளாவிக் கிடந்தது போலும், இளம்பிறையே. | [9] |
கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி, பல்-நெடுங்காலம் மழைதான் மறுக்கினும், பஞ்சம் உண்டு என்று என்னொடும் சூள் அறும்-அஞ்சல்!-நெஞ்சே! இமையாத முக்கண் பொன்நெடுங்குன்றம் ஒன்று உண்டுகண்டீர், இப் புகல் இடத்தே. | [10] |
மேலும் அறிந்திலன், நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து மாலும் அறிந்திலன்; மால் உற்றதே; வழிபாடு செய்யும் பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக் காலன் அறிந்தான், அறிதற்கு அரியான் கழல் அடியே! | [11] |